Friday, August 28, 2009

அடுத்து என்ன நடந்திருக்கும்?




திக் திக் திக்திக்..............


பல நாள் சாப்பிடாமல் முதியவர் ரோட்டோரம் உக்காந்திருக்கிறார்.
பஸ்சை முந்திக்கொண்டு லாரி வருகிறது.
முந்தி வந்தபின்தான் லாரி டிரைவருக்கு முதியவர் தெரிகிறார்.
பிரேக் பிடித்தாலும் முதியவரை காப்பாதுவது கஷ்டம்.
ஏனென்றால் லாரியின் வேகம் அப்படி.
கோவையில் இது போன்ற காட்சிகள் தினந்தோறும் பார்கலாம்.
அது சரி அந்த முதியவர் என்ன ஆனார்?








அதிஸ்டவசமாக உயிர்தப்பினார்.

Monday, August 24, 2009

தண்ணீர்....... தண்ணீர்.......



திருப்பூர்

தமிழ் நாட்டிலே அதிக வருவாய் ஈட்டும் நகரங்களில் முதல் நகரம் திருப்பூர். வருமான வரி அதிகமாக செலுத்தும் நகரம் திருப்பூர். வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள் திருப்பூர் சென்றால் பிழைத்துக்  கொள்ளலாம். வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போர்ட் எப்பொழும் எங்காவது ஓர் இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். பணப் புழக்கம் அதிகமாக உள்ள நகரம் திருப்பூர்.

        இப்படி பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், தண்ணீர் தட்டுப்பாடு, நெருக்கடியான சாலைகள். சுத்தமின்மை, என்று திருப்பூரின் மறு பக்கத்தை சொல்லிக்  கொண்டே போகலாம். திருப்பூர் பல லட்சாதிபதிகளையும், கோடீஸ்வரர்களையும் உருவாக்கிய நகரம். ஆனால் இங்கு உள்ளவர்கள் சுற்றுப்புறச் சூழல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். இவர்களுடைய நோக்கம் பணம் பணம், வியாபாரக் கண்ணோட்டத்துடன் வாழ்பவர்கள். கோவையில் உள்ள ஈஷா  பவுண்டேஷன் சார்பில் பசுமைத் திருப்பூர் இயக்கம் துவக்கப்பட்டு, முதல் கட்டமாக திருப்பூரில், ஒரே  நாளில் 25000 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

          தமிழ் நாடு முழுவதும் 11.4 கோடி மரக் கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் மரக்கன்றை துணை முதல்வர் ஸ்டாலின் நட்டு வைத்து சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் ஈஷா பவுண்டேஷனை பாராட்டியதோடு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறினார். அடுத்த 50 ஆண்டுகளில் உலகத்தில் முக்கிய பிரச்சனையாக தண்ணீர்தான் இருக்கும். தண்ணீருக்காக உலகப்போர் நடக்கலாம், ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் மனிதர்கள் தண்ணீருக்காக அடித்துக் கொள்வதும் நடக்கும் என்று உலக சுற்றுப்புற சூழல் ர்வலர்கள் கூறுகின்றனர். தமிழகமும், கர்நாடகமும் காவிரி தண்ணீருக்கும். தமிழகமும் கேரளம், முல்லை பெரியார் தண்ணீருக்கும். பாலாற்று தண்ணீருக்கு ஆந்திர அரசுடன் மல்லுகட்டுவது இப்பொழுதே பார்த்துக்  கொண்டுதான் இருக்கிறோம். மனிதர்கள் மனது வைத்தால் இருக்கிற மரங்களை பாதுகாப்பதோடு, புதிய மரங்களை வளர்த்து பூமியை பசுமைக் காடாக மாற்றலாம்.

ஒரு காரியம் நடக்க வேண்டுமானால் பொருளாதாரமும். அதை செயல்படுத்துவதற்கு மனதும் இருந்தால்தான் காரியம் வெற்றிபெறும். அரசியலும் ஆனமீகமும், ஒன்று சேர்ந்தால் நிறைய நல்ல விசயங்களை சாதிக்கலாம் என்பது தான் மேலே கண்ட மரம் நடும் விழா. மரம் நடுவதோடு கடமை முடிந்து விட்டதாக எண்ணாமல் மூன்று வருடங்களுக்கு மரத்தை பாதுகாக்கும் பொறுப்பையும், பசுமை திருப்பூர் இயக்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. என்பதை நினைக்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது.

அவர்கள் பணி தொடர வாழ்த்துவோம்.

Friday, August 21, 2009

பிள்ளையாருக்கு நேர்ந்த அவமானம்.




ஒன்றே குலம் ஒருவனே தேவன்

மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பித சூத்ர
வாமனரூ மஹேஸ்வர புத்ர
விக்ன வினாயக பாத நமஸ்தே!!

( ஒரு பிள்ளையார் பக்தனின் ஏக்க பதிவு , படித்துவிட்டு உங்கள் கருத்தை தவறாமல் பதிவு செய்யவும்.)

தமிழகத்தில் வழிபடும் தெய்வங்களில் பிள்ளையாருக்கு மிக முக்கிய இடம் உண்டு. நாம் ஒரு காரியத்தை தொடங்கு முன் முதலில் பிள்ளையாரை வணங்கிய பிறகு தான் அடுத்தது எல்லாமுமே. அப்பேர்பட்ட பிள்ளையாரை நாம் எந்த அளவுக்கு கேவலப்படுத்துகிறோம். வினாயகர் சதுர்த்தி வந்துவிட்டாலே தொலைகாட்சிகளிலும், நாளிதழ்களிலும், வினாயகர் சதுர்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு, வினாயகர் சிலைகைளுக்கு 7000 காவலர்கள் இரவு பகலாக ரோந்து. 500 சிலைகளுக்கு தினசரி வெடிகுண்டு, மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது. காவல் துறை ஆணையர் தலைமையில் அணிவகுபப்பு ஊர்வலம், ரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளை தவிர்க்குமாறு தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள். போன்ற அறிக்கைகள் தவறாமல் இடம் பெறும்.

இன்று தமிழகத்தில் பட்டி தொட்டிகள் தெருவெங்கும் அனைத்து இடங்களிலும், குறிப்பாக வினாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரை கோலகலமாக விழா எடுத்து சுற்றுப்புறச் சூழல் மாசு பட அனைவரின் முகம் சுழிக்கும் வகையில் கொண்டாடுகிறோம். உண்மையில் பக்தி பரவசத்தில் பிள்ளையாரை வணங்குகிறோமா??? !!! ... பிள்ளையார் எந்த கால கட்டத்தில் தமிழகத்திற்கு வந்தார்? சற்று பின் நோக்கி பார்போம்.


தமிழர் வரலாற்றை அறிய இலக்கியங்களும், கல்வெட்டுகளும், அகழ்வாய்வு சான்றுகளும் உதவுகின்றன. சங்க காலத்திற்கு முற்பட்ட தொல்காப்பியத்தில் ஒரு இடத்தில்கூட பிள்ளையார் வழிபாட்டைப் பற்றி குறிப்பிடவில்லை. சங்க காலத்தில் கி.மு மூன்றாம், கி.மு இரண்டாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் தமிழர் சமய வரலாறை பல பாக்களால் பல அறிஞர்கள் தொகுத்துள்ளனர். சேயோன்(முருகன்), மாயோன்(திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன், பழையோள். (கொறஅறவை), முக்கண்ணன் (சிவபெருமான்), பலராமன், உமை என தமிழர் வழிபட்ட தெய்வங்களை சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் கூறப்படுள்ளது. இங்கும் பிள்ளையாரின் வழிபாடு வரவில்லை, சங்ககாலத்தில் பிற்பட்ட கலித் தொகையிலும், பரிபாடல், ஆகிய இரண்டிலும் பிள்ளையாரைப்பற்றி வரவில்லை. என்பதை நாம் தெளிவுபடித்துக் கொள்ளவேண்டும்.

      (கி.பி ௨00 -கி.பி 500) காலகட்டத்தை சேர்ந்த திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம், முதலிய இலக்கியங்களில் எந்த இடத்திலும் பிள்ளையாரைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்பர், சம்பந்தர் இயற்றிய திருமுறைகளில் பிள்ளையாரின் தோற்றம் வடிவம் ஆகியவற்றை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மூத்த முழு முதல் கடவுள் என வணங்கும் பிள்ளையார் பின் நாளில் கி.பி ஏழாம் நூற்றாண்டில் தான் நாம் அறியப்படுகின்றோம். அப்பர், சம்பந்தர் ஆகியோரும் முருகப்பெருமானை குறிப்பிட்டுள்ள அளவுக்கு கூட பிள்ளையாரைப் பற்றி குறிப்புகளைத் தரவில்லை. பிள்ளையாரைப் பற்றி குறைந்த அளவே குறிப்புகள் தந்திருகின்றனர். இப்படி லேட்டாக பிள்ளையார் வந்தாலும், பிள்ளையாருக்குதான் முதலிடம். அவ்வாறான பிள்ளையாரை எப்படியெல்லாம் அவமதிக்கிறோம்.

கீழ் காணும் படங்களை பாருங்கள்.

        நான் சிறுவனாக இருந்தபொழுது வினாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் அழகாக பிள்ளையாரை செய்து வழிபாட்டுக்குப் பிறகு மறு நாள் காலை வீட்டுக்கிணற்றிலோ அல்லது குளதிலோ, ஆற்றிலோ போடுவோம். அப்பொழுது இருந்த சந்தோசம் குதூகலம் இப்பொழுது இல்லை.
வீடுகள், கோயில்களில் மட்டுமே வணங்கப்பட்ட பிள்ளையார் வீதிக்கு எப்பொழுது, எப்படி வந்தார்? 1893 ஆண்டு லோகமான்ய திலகரால், சிதறிகிடந்த மக்களை ஒன்று சேர்ப்பதற்காகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடவும், விநாயக சதுர்த்தியை ஒரு சமூக பண்டிகையாக மாற்றினார். மகாராஷ்டிரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வடமாநிலங்கள் முழுவதும் வெகு விமர்சையாக 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு

ஊடகங்களினாலும் வடமாநில மக்கள் அங்கிருந்து இங்கு வந்து குடியமர்ந்த பொழுதும், தமிழ் நாட்டில் பிள்ளையார் வீதிக்கு வந்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட  கட்சியை வளர்க்க விரும்பியவர்கள் பிள்ளையாரை ஒரு கருவியாக பயன்படுத்தி வீதிக்கு பிள்ளையாரை கொண்டு  வந்துவிட்டனர். மற்றும் பல அமைப்புகள் நான் பெரியவன் நீ பெரியவன் என்று காட்டுவதற்காக இந்த ஏரியாவில் 400 பிள்ளையார் பிரதிஷ்டை. அந்த ஏரியாவில் 1500 பிள்ளையார் பிதிஷ்டை, என்று போட்டி போட்டுக் கொண்டு பிள்ளையாரை அவமதித்து விட்டனர்.

ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி, கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி, கேரளாவிலிருந்து முல்லை பெரியார் நீர் அனைத்தும் கேள்வி குறியாகிவிட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய அனைத்து இடத்திலும் சாய கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரிடையாக நொய்யல் ஆற்றிலும், மற்றும் பவானி, காவிரியிலும் கலக்கின்றன. திருப்பூரிலிருந்து வரும் சாய கழிவு ஒரத்துப்பாளையம் அணை நிரம்பி வழிகிறது. விவசாயிகளின் போராட்டம் கானல் நீராகிவிட்டது. நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகும் ஒரத்துப்பாளையம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசாகட்டும், அண்டை மாநிலமாகட்டும் செவிசாய்பதில்லை. தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற ஏரி, குளம், ஆறு, ஆகியவற்றை காப்பது நமது கடமையல்லவா? பிளாஸ்ராப் பேரிஸ் என்ற நச்சுப் பொருளினால் செய்யப்பட்டு ரசாயன கலவையால் வர்ணம் பூசிய ஆயிரக்கணக்கான பிள்ளையாரை கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற ஏரி, குளம், ஆறு, ஆகியவற்றில் போடுவதனால் நாம் அடுத்த சந்ததியினருக்கு விசத்தை விதைத்துவிட்டு போகிறோம் என்று பொருள்.
நாம் தான் நமக்கு பிடித்தமான மதத்தில் பிடித்தமான தெய்வத்தை பிடித்தமான வடிவத்தில் வணங்குகிறோம். தவறில்லை கடவுள் பெயரால் சமூதாய
சீர் கேட்டை அனுமதிக்க கூடாது.







கையொடுத்து கும்பிட வேண்டிய பிள்ளையாரை காலால் மிதிக்கலாமா?

நம்மை காக்க வேண்டிய பிள்ளையாரை போலிசை வைத்து நாம் காவல் வைக்கலாமா?

பிள்ளை மனம் படைத்தவர் பிள்ளையார். என்று நினைத்து பிள்ளையாரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். பிள்ளை மனதுக்கு கோபம் வந்தால் நாடு தாங்காது.

குரல் கொடுத்தால் வலம் வருவார் பிள்ளையார், ஆகையால் வீட்டில் களிமண்ணால் பிள்ளையாரை செய்து குரல் கொடுத்து கூப்பிட்டு வலம் வரச்செய்து சந்தோசமாக வழிபடுங்கள்.

( வினாயகர் சதுர்த்தி கொண்டாடபோகிறோம், பிள்ளையார் வைக்கப்போகிறோம், என்று யாராவது டொனேசன் கேட்டு வந்தால் பணம் கொடுக்காதீர்கள். ஏதே நம்மால் ஆன சிறிய உதவி இது )

பின் குறிப்பு : ஹைதராபாத்தில்,செகன்திராபாத் என்ற இரட்டை நகரத்தின் மத்தியில் உள்ள பிரசித்திப்பெற்ற உசேன் சாகர் ஏரியில் பல வருடங்களாக ஆயிரக்கணக்கான பிள்ளையாரை போட்டதன் விளைவு இன்று ஏரி நிறைய தண்ணீர் இருந்தும், உபயோகப்படுத்த முடியாத நிலையில் கெட்டு கிடக்கிறது.

வாழ்க வளமுடன்.

Monday, August 17, 2009

“இடையில்” நடக்கும் அத்தனையும் கிக்குதான்

சட்டம் ஒரு இருட்டரை அரசியல் ஒரு சாக்கடை
இடைத்தேர்தல் கூத்து

நாளை 18-08-09 ஆம் தேதி தமிழகத்தில் 5 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடையில் வரும் தேர்தல் தேவையா? 5 சட்டமன்ற உறபினர்களில் 2 சட்டமன்ற உறுப்பினரிகள் எதிர்பாரமல் மரணமடைந்து விட்டதாலும், 2 (கம்பம்}தொண்டாமுத்தூர்) உறுப்பினர்கள் மதிமுக விலிருந்து திமுக வுக்கு கட்சி தாவிச் சென்றுவிட்டதாலும், இளையான்குடி - சட்டமன்ற உறுபினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் MP போட்டியிட்டதாலும், காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. சுய நலத்துக்காக பதவியை ராஜினாமா செய்வதற்கெல்லாம் தேர்தல் தேவையா? ஒரு முறை தேர்தல் நடத்த, தேவையில்லாத கால விரயமும், பொருள் விரயமும் ஏற்படுகிறது. மற்றும் புதிய உறுப்பினர் தேர்தெடுக்கும் வரை மக்கள் நலப் பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. கட்சி மாறுபவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை கொண்டுவர சட்டம் இயற்ற வேண்டும். அப்பொழுதான் சுயநலத்துக்காக கட்சி மாறுபவர்களுக்கு படிப்பினையாக இருக்கும். இன்றைய திமுக வின் சாதனை என்று சொன்னால் மாற்றுக்கட்சி உறுப்பினர்களை திமுக வுக்கு இழுப்பதுதான். கம்பம்-ராமகிருஷ்ணன், தொண்டாமுத்தூர்-கண்ணபன், திருசெந்தூர்-அனிதா மதிமக வின் ராதகிருஷ்ணன், இப்படி இவர்களது பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மாற்றுக் கட்சி உறுப்பினர்களை (பிள்ளைகளை பிடிகிறமாதிரி) பிடிச்சி பிடிச்சி போடுவதுதான் வேலை. இதை மதுரை அண்ணன் மத்திய மந்திரி சாதனையாக செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனல் கவனம் செலுத்தினால் சந்தோஷப்படலாம். மாற்றுக்ட்சியிலிருந்து வருபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த இடைத்தேர்தலில் கம்பம் தொகுதியில் மதிமுக லிருந்து வந்தவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார் கலைஞர்.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கூட்டணிக் கட்சி தான் வெற்றி பெற வேண்டும். என்று எழுதப்படாத சட்டமாகிவிட்டது. ஜனநாயகமெல்லாம் பணநாயகமாக மாறிவிட்டது தான் காரணம்.


விழுப்புரம் சத்தியாகிரக இயகத்தின் உறுப்பினர்கள், தொண்டாமுத்தூர்(கோவை) சட்டசபை தொகுதி மக்களிடம் பணம் வாங்காமல் ஓட்டுப் போடுங்கள் என்று மக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் சொய்யும் காட்சி. ஒரு பாட்டியிடம் என்ன பாட்டி காலில் விழுந்து பணம் வாங்கம ஓட்டு போடுங்கள் என்று சொல்லுகிறார்களே நீங்க எப்படி பாட்டி என்று கேட்டது தான் தாமதம். டோய் போக்கெத்த பசங்களா போங்கடா பிழப்புள மண் அள்ளி போட்டுடாதீக என்று கூறினார். ஆக பணம் வெல்லபோவது உறுதியாகிவிட்டது. பணம் கொடுப்பதையோ, பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தினால் கட்டுப்படுத்தமுடியவில்லை. சட்டம் ஒரு இருட்டறை அரசியல் ஒரு சாக்கடை என்று அன்று அண்ணா சொன்னது சரியாகிவிட்டது.


கோவை தொண்டாமுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அன்பழகன், ஸ்டாலின்,கனிமொழி, ராசா, சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு, வாசன்,நெப்போலியன் மற்றும் பலர் ரவுண்டுகட்டி பிரசாரம் செய்தனர். இடைத்தேர்தலுக்கு இத்தனை ஆர்பாட்டம் தேவையா? வழக்கம்போல் தேர்தல் முடிவு ஆளும் கூட்டணிக் கட்சி அமோக வெற்றி பெற்று விட்டது. என்றும் எங்கள் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று திமுக வும், இது அராஜகத்தின் வெற்றி என்று எதிர் கட்சிகளும், மாறி மாறி புளிச்சிப்போன பதிலை சொல்வார்கள். இதை கேட்க வேண்டியது தமிழக மக்களின் தலை எழுத்து. நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலின் போது கலைஞருக்கு வயதாகிவிட்டது. ஒய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பாக பணி செய்கிறார். ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். (இது எப்படி இருக்கு) எலக்ரானிக்ஸ் ஓட்டி மெஷினில் தில்லு முல்லு செய்து திமுக வென்று விட்டது என்றும் அதனால் பழைய முறையில் தான் ஓட்டுபோடும் முறை கொண்டுவர வேண்டும் என்று ஜெய-கூறினார். தேர்தல் ஆணையம் அத்தனை கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து. எலக்ரானிக்ஸ் மெஷினில் முறைகேடுகள் நடத்தமுடியும் என்று நிருபித்துக்காட்டுங்கள் என்று ஆனால் இந்த வாய்பையும் ஜெயலலிதா யன்படுத்õக்கொள்ளவில்லை. கூட்டி கழித்துப் பார்தால் ஜெயலலிதாவுக்கு கலைஞர் 100 மடங்கு (சில விசயங்கள் மணல் கடத்தல் தடுக்க தவறியது, திறமையில்லாத மந்திரிகளை மாற்ற தவறியது. போன்றவற்றை விடுத்து பார்க்கும்பொழது) பரவாயில்லை .


பின் குறிப்பு: கடைசி கட்ட தொண்டாமுத்தூர் (கோவை) நிலவரம். இரண்டாவது இடத்துக்கு வரும் என்று எதிர்பார்கப்பட்ட கொங்கு நாடு முன்னேற்ற கழகம் மூன்றாம் இடத்துக்கும், தேமுக விஜய்காந் இரண்டாம் இடத்துக்கும் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மூன்று லட்சத்து நாற்பது ஆயிரம் வாக்குகள் கொண்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நகரப்பகுதியிலும் மீதிப் பேர் கிராமப்பகுதியிலும் உள்ளனர். நகரப் பகுதில் உள்ள வாக்குகள் வியகாந்துக்கு கனிசமாக விழுந்தால் விஜயகாந் வெற்றி பெற வாய்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.


மீண்டும் ஒரு பின் குறிப்பு: விழுப்புரம் அருகே உள்ள காரைக்கால்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாஸ்திரி என்பரால் 2005 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இயக்கம்தான் சத்தியாகிரகா. வன் முறை, லஞ்சம், ஜாதி போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்று விரும்பிய இவர், அதற்காக எடுத்த ஆயுதம் தான் காலில் விழும் சத்தியாகிரகம். இவருடைய முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம். வாழ்த்துக்கள்.

Wednesday, August 12, 2009

போடா... பன்னி ...



SWINEFLU
யாரையாவது திட்டவேண்டுமானால் போடா... பன்னி ...என்று திட்டுவார்கள் ஆனால் இன்று பன்றி என்ற வார்த்தையை கேட்டாலே இந்திய நாடே அதிர்கிறது. இதுவரை டாக்டர் உட்பட பதினைந்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர்.
தமிழ் நாட்டில் சென்னையில் பன்றி காய்சலால் சிறுவன் இறந்து விட்டான். மற்றும் பலருக்கு பன்றியின் வைரஸ் தாக்குதல் அறிகுறி தென்படுவதால், தமிழ் நாட்டில் பீதி பற்றிக்கொண்டது. நகரப்பகுதிகளில் உள்ள விழிப்புணர்ச்சி கிராமப்பகுதிகளில் இல்லை. எனது நண்பருக்கு பன்றி காய்சல் பற்றி கூறும்போது பன்றி காய்சல் பன்றிக்கு தான் வரும், என்று சர்வசாதாரணமாக சொல்கிறார். மனிதனை பன்றி இனதுடன் சேர்த்துவிட்டார்.
பன்றி காய்சல் நோயிலிருந்து எவ்வாறு தப்புவது?
இது ஒரு தொற்று நோய் ஆகும். hospital, கல்வி நிறுவனங்கள், மற்றும் பொது இடங்கள், எங்கு நோக்கினாலும், முககவசம்,அணிந்து மக்கள் காணப்படுகினர். 1000 பேருக்கு தொற்று ஏற்பட்டால் அதில் 50 பேர் கடுமையாக பாதிக்கபடுகின்றனர். ஒருவர் இந் நோயிக்கு பலியாகிறார்.
பன்றிகாய்சல் நோயின் அறிகுறி என்ன? அவ்வாறு
அறிகுறி தென்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்.
இருமல், கடுமையான காய்சல், தொண்டை வலி, தலைவலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி,வாந்தி, வயிற்றுப்போக்கு, இவைகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சென்று சிகிச்சைப்பெற்றால் பன்றி காய்சலிலிருந்து, விடுதலைப்பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெரியவர்கள், மற்றும் சிறுவர்கள், கரபிணிப்பெண்கள், இதயநோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் நோய் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேன்டும். இந்த நோய்யிலிருந்து எவ்வாறு தப்புவது? அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். சத்துள்ள பழங்கள், மற்றும் பருப்பு வகைகள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்கவேண்டும்.
அடிக்கடி கை கால் உடல் அனைத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
நன்றாக தூங்க வேண்டும். முக்கியமாக மக்கள் அதிகமாக கூடும் பஸ், ரயில் நிலையங்கள், மார்கெட் போன்ற இடங்களுக்கு அவசியம் ஏற்பட்டால்ஒழிய செல்லவேண்டாம். அவ்வாறு செல்ல நேர்தால் முக கவசம் அணிந்து செல்லுங்கள். நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்ளை பார்க நேர்ந்தால் கண்டும் காணாமல் சென்றுவிடுங்கள்.

Tuesday, August 11, 2009

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்,

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும், என்று கேள்விபட்டிருக்கிறோம்.
11-08-2009 இன்று கெம்பட்டி(கோயம்புத்தூர்) பி1 போலிஸ் ஸ்டேசனுக்குள் புகுந்த பாம்பை பாம்பு பிடிப்பவர் பிடிக்கிறார்.
போலிஸ்கார்கள் ஓட்டம்பிடிக்கும் காட்சி.

Tuesday, August 4, 2009

இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையே உன்னதமான வாழ்க்கை.


எல்லை மீறினால் எல்லாம் துன்பம் தான்.
(முந்தய பதிவின் தொடர்ச்சி)

ஒத்த கருத்துள்ளவர்கள் தான் நண்பர்களாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒத்துபோகாத கருத்துள்ளவர்கள் கூட நண்பர்களாக இருக்கலாம். நானும் நண்பர் ரகுவும் சமீபத்தில், கடந்த இரண்டு வருடங்களாக கோவை வன பகுதியில் யானைகள் கொல்லப்படுவதைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் பாலா அவர்கள் வந்தார். (பாலா அவர்கள் பழகுவதற்கு இனிமையானவர். பல பேருக்கு வேலை கொடுப்பவர். இறை நம்பிக்கை உடையவர். )

அவசர உலகத்தில் மனிதர்கள் படும் பாடு சொல்லிமாளாது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இல்லாமை, நடுதர மக்கள் குழந்தைகளுக்கு கல்வி, மற்றும் சரியான மருத்துவ வசதி போன்றவை எட்டாக் கனியாக தான் உள்ளது. வாழ்க்கையே போராட்டமாகத்தான் உள்ளது. மனிதர்களைப் பற்றி நினைத்து ஏதாவது செய்ய முடியுமா? என்று பாருங்கள், யானையைப் பற்றி பிறகு சிந்திக்கலாம் என்று சர்வ சாதாரணமாக கூறிச் சென்றுவிட்டார்.

பாலாவின் கருத்து பாலாவின் கருத்தாகவே இருக்கட்டும். அதற்கு பதில் கூறத் தெரியவில்லை  எனக்கு. என் கருத்தை மட்டும் நான் கூறுகிறேன்.

1. யானைகள் மக்களுடைய குடியிருப்பை நோக்கி வருகிறது, என்று   கூறுவதற்கு    பதில் நாம் தான் வனத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.

2. மலை உசச்சியில் சமூக விரோத செயல்கள் கஞ்சா பயிரிடுவதாகவும், மற்றும் பல சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாவும், சமுக விரோதிகள்தான் யானையை வெடி வைத்து விரட்டுவதாகவும் உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன.

3. சுற்றுப்புற சூழல் (மரம் வெட்டி கடத்துவது, வன விலங்குகளை வேட்டையாடுவது, காட்டை அழிப்பது) போன்ற காரணங்களுக்காக யானைகள் உணவுக்காகவும், குடி நீருக்காகவும் கிராம நகரப் பகுதிகளுக்கு வருகின்றன.

           மொத்தம் 700 சதுர கி. மீ. பரப்புள்ள கோவை வனக் கோட்டத்தில் மட்டும் 250 -300 யானைகள் வசிக்கின்றன. வேட்டையாடுதல், விபத்து, மின் வேலிகளில் சிக்கி உயிரிழப்பது போன்ற காரணங்களினால் ஆண் பெண் விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. 27 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை தான் உள்ளன என்று யானை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் யானையை அடுத்த சந்ததியினர் காட்சிப் பொருளாகத்தான் பார்க்க முடியும். வன விலங்குகளை வைத்துதான் ஒரு வனத்தின் வளமையை நிர்ணயிக்கப்படுகிறது. வன விலங்குகள் இல்லாத காடு அழிந்து விடும். காடு அழிந்தால் மழை குறைவு சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடைந்து மனிதன் நடைப்பிணமாகத்தான் வாழவேண்டியது வரும். வளமையான வாழ்வுக்கு வளமான காடு இன்றியமையாதது.

     மனிதனால் உருவாக்க  முடியாததும் அதிகபடுத்தமுடியாததும் நிலப்பரப்பும், எல்லையையும்தான். பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக விவசாயம் செய்ய, வீடு கட்ட என்று கூறிக்கொண்டு காட்டை நோக்கி ஓடுகிறோம். இவ்வாறு மாறி வரும் வாழ்க்கை சூழலுக் கேற்ப நமது வாழ்க்கை முறையினை இயற்கையோடு இணைந்து செயல்பட  வேண்டும். அதற்கு நாம் முதலில் செய்ய  வேண்டியது, (Real Estate) என்ற பெயரில் கட்டுபாடு இல்லாமல் நாட்டையும் காட்டையும் கூறு போட்டுக்கொண்டிருப்பவர்களை சட்ட திட்டங்களை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு  வரவேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும். (வளர்ந்த வசதியான நடுகள் அனைதிலும் மக்கள் குறைவாகவே உள்ளனர்.)

பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கவேண்டும். கோவை போன்ற வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தனி வீடு கட்ட தடை போடவேண்டும். (தனி வீடு கட்டிக்கொண்டே போனால் விளைநிலங்கள் அனைத்தும் விலைநிலங்களாக மாறி வரும் அவலம் ஏற்படுகிறது.) இவ்வாறு செய்வதனால் வன விலங்குகளை ஓரளவேனும் காப்பாற்றலாம்.

வனத்துறைக்கு முக்கிய பொறுப்புக்கு வருபவர்கள் வனம் மற்றும் வன விலங்குகளை பற்றிய அறிவும் வனத்தைப்பற்றிய அக்கறையும் ஆர்வமும் இல்லாததும், மற்றும் அரசியல்வாதிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாததும் தான் வனம் அழிவதற்கும், வன விலங்குகள் இறப்பதற்கும் முக்கியமான காரணம்.

     யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன், என்பதை தவறாக புரிந்து கொண்டு யானை இறப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை? மனிதன் தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொள்கிறான். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையே உன்னதமான வாழ்க்கை.
பாலாவின் கருத்து சரியா? தவறா?